Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

 குரூப் 4 பணியிடங்களுக்கு ஜனவரியில் கலந்தாய்வு..  TNPSC அறிவிப்பு..!

By VASUKI
28 Nov 2024, 08:38 AM
குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 4 பணியிடங்களில் 8 ஆயிரத்து 932 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிப்பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023 ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.

குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில், எழுத்துத் தேர்வை மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வு எழுதினர்.  

இந்த நிலையில் இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்த்தியது. 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அக்டோபர் 28 ஆம் தேதி https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிட்டது. 

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சான்றிதழ்களை சமர்பித்தவர்கள் அளித்த விபரத்தின் அடிப்படையில் அவர்களின சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்தப் பின்னர் 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tags
# tnpsc