Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

டிஜிபி அலுவலகம் முன்பு பரபரப்பு: புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

By VASUKI
06 Sep 2025, 11:47 AM
சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, விசிகவினர் மூர்த்தியைத் தாக்கினர். இந்தச் சம்பவம் நடந்தபோது, பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும், காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும், யாரும் தடுக்க வரவில்லை எனவும் மூர்த்தி குற்றம்சாட்டினார்.

விசிகவினர் தாக்குதல்குறித்த செய்தியாளர்களைச் சந்தித்த மூர்த்தியின் குற்றச்சாட்டுகள்:

போராட்டத்தின் காரணம்:

பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். அதற்காக, தான் காத்திருந்தபோது தாக்குதல் நடந்ததாக மூர்த்தி தெரிவித்தார்.


தாக்குதலுக்கான காரணம்:

பட்டியலின சமூகத்திற்கு திருமாவளவன் துரோகம் செய்து வருவதை தான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், விசிகவினர் தன்னைத் தாக்க முயற்சிப்பதாகவும், இது தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

காவல்துறையின் அலட்சியம்:

டிஜிபி அலுவலகம் வாசலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் முன்னிலையிலேயே தன்னைச் செருப்பால் தாக்கியதாகவும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மூர்த்தி குற்றம்சாட்டினார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் காவல்துறையினர் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலின்போது, தன்னைத் தாக்கிய நபர்களை மூர்த்தி தான் வைத்திருந்த பட்டன் கத்தியால் தாக்கியதாகவும், அதன் பிறகே அவர்கள் அங்கிருந்து ஓடியதாகவும் தகவல் வெளியானது. மேலும், திருமாவளவன் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிப் புகார் அளித்திருப்பதாகவும் மூர்த்தி குறிப்பிட்டார். டிஜிபி அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் கூடத் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.