தமிழ்நாடு

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

By VASUKI
09 Oct 2025, 03:35 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லநாயக்கனூர் பைபாஸ் பிரிவுச் சாலையில், யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் இருந்து கொல்லநாயக்கனூர் நோக்கி மாணவர்களை ஏற்றி வந்த கல்லூரி வாகனம், பைபாஸ் பிரிவுச் சாலையில் இருந்த மேடான வளைவில் ஏறியபோது நிலைதடுமாறியது. இதனால், வாகனம் பின்னோக்கி நகர்ந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சாலையோரம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் வராததால், பொதுமக்கள் காயமடைந்த மாணவர்களைத் தங்கள் இருசக்கர வாகனங்களில் ஏற்றி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் கை, கால் முறிவு உள்ளிட்ட காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.