தமிழ்நாடு

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

By VASUKI
18 Sep 2025, 03:19 PM
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
பொள்ளாச்சி, பழனியாண்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பவிப்பிரியா (26), அதே பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சேதுபதி** என்பவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்குப் பவிப்பிரியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆணவப் படுகொலை மிரட்டல்:

பெற்றோரின் எதிர்ப்பை மீறி, பவிப்பிரியாவும் சேதுபதியும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பவிப்பிரியாவின் பெற்றோரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர்கள் இருவரையும் அடித்துத் துன்புறுத்தி, “நைட்டோட நைட்டா கழுத்தில் சுருக்கு போட்டுத் தூக்கில் தொங்க விட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்ட பின்னரும், நீங்கள் எங்கு சென்றாலும் உயிருடன் நிம்மதியாக வாழ முடியாது எனத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். பவிப்பிரியாவின் உறவினர்கள் சேதுபதியின் தாயை மிரட்டியதோடு, அவரது சகோதரரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல்களால் அச்சமடைந்த காதல் ஜோடி, தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவக் கொலை நடைபெறுவதற்கு முன் தங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.