Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

By VASUKI
26 Sep 2025, 05:51 PM
கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கச் சென்ற தொழிலதிபர் மீது, வங்கி மேலாளர் ஆட்களை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் செல்போனில் பதிவாகி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு, ஏரோ ட்ராப் வித்யா நகரைச் சேர்ந்தவர் பிரஜித்குமார் (வயது 29). வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்திவரும் இவர், பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், இவரது வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டதால், அவரால் பணம் எடுக்கவோ, செலுத்தவோ முடியாமல் போனது.

இது குறித்து விசாரிக்க ஊழியர்களை அனுப்பியபோது, வங்கி அதிகாரி முதலில் இரத்தினபுரி காவல் நிலையத்திலும், பின்னர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் இருப்பதாகத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரஜித்குமார், நேரடியாக வங்கி அதிகாரியைச் சந்தித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சரியான பதில் கிடைக்காததால், அவர் தனது கணக்கை முடித்துத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது வங்கி அதிகாரி பிரஜித்குமாரைக் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரஜித்குமார், வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பேன் என்று கூறியதும், வங்கி அதிகாரி செல்போனில் சிலரிடம் பேசி உள்ளார். அதன் பிறகு, வங்கியிலிருந்து வெளியில் வந்த பிரஜித்குமாரை, வங்கி அதிகாரி அனுப்பிய ஆட்கள் வாசலிலேயே வைத்துச் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவரது வயிறு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

அந்தக் கும்பலில் இருந்த மொட்டை அடித்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி, வங்கி அதிகாரி மீது புகார் அளித்தால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரஜித்குமார், நடந்த சம்பவம் குறித்துப் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாடிக்கையாளரே முதலாளி என்று அனைத்து வங்கிகளும் எழுதி வைத்திருக்கும் நிலையில், இந்த வங்கியில் தொழிலதிபர் மீது அடியாட்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.