Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- எந்த மாவட்டத்தை சார்ந்தவர்கள்?

By MUTHUKRISHNAN
03 May 2025, 07:05 AM
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில். உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த "நம்மாழ்வார்" அவர்களின் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக. 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது. உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக 2.50 இலட்சம் ரூபாய் மற்றும் ரூ.10.000/- மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸ் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக 1.50 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் ரூ.7.000/- மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாஸ் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக 1 இலட்சம் ரூபாய் மற்றும் ரூ.5.000/- மதிப்பிலான பதக்கமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

பணி நியமன ஆணை வழங்கல்:

அதனைத் தொடர்ந்து வேளாண் துறைக்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும். அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், காலியாகவுள்ள பணியிடங்கள் படிப்படியாக விரைந்து நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப. வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.