Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

By VASUKI
09 Sep 2025, 09:52 PM
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 146 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் நலனுக்காக, காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப. உத்தரவின் பேரில் இன்று (09.09.2025) ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்‘‘ நடைபெற்றது. இம்முகாமில், 146 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். பணிமாறுதல், தண்டனை நீக்கம், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஆணையரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

இம்முகாமில், 2 காவல் உதவி ஆணையாளர்கள், 14 ஆய்வாளர்கள், 33 உதவி ஆய்வாளர்கள், 8 அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் 89 காவலர்கள் என மொத்தம் 146 பேர் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் G.கார்த்திக்கேயன், இ.கா.ப, துணை ஆணையாளர்கள் திரு. ஶ்ரீநாதா, இ.கா.ப., (சைபர் கிரைம்) மற்றும் திருமதி. B.கீதா (தலைமையிடம்) உள்ளிட்டோரும் உடனிருந்தனர். காவல்துறையினரின் குறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட இந்த முகாம், காவலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.