தமிழ்நாடு

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

By VASUKI
09 Sep 2025, 09:43 PM
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
2015-ஆம் ஆண்டு அடையாறில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், W-34 தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் N. தர்மா தலைமையிலான குழு சிறப்பாக விசாரித்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றுத் தந்தது. இதனைப் பாராட்டி, அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.

39.9 கிலோ கஞ்சா பறிமுதல்:

புனித தோமையர்மலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் G. கரிகாலன், காவலர்கள் D. பாலாஜி மற்றும் P. முனியசாமி ஆகியோர் அடங்கிய குழு, ரகசியத் தகவலின் பேரில், 39.9 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒரு சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்தனர். இந்தச் சிறப்பான நடவடிக்கையை பாராட்டி அவர்களுக்கும் வெகுமதி வழங்கப்பட்டது.

வலிப்பு வந்த குழந்தைக்கு உதவி:

திருவொற்றியூரில் நடைபெற்ற 'உங்களுடன் முதல்வர்' குறைதீர் முகாமில், திடீரென வலிப்பு ஏற்பட்ட 2 வயது குழந்தையை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் N. மாரிதுரை பாராட்டப்பட்டார். அவரது சமயோசித செயலால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு வெகுமதி அளிக்கப்பட்டது.

பல்வேறு சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் ஆ. அருண் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது, சக காவலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.