தமிழ்நாடு

சென்னை விமான சேவை பாதிப்பு: திடீர் சூறைக்காற்று மழையால் 24 விமானங்கள் தாமதம்!

By VASUKI
18 Sep 2025, 09:53 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று மழை பெய்ததால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று மாலை 6 மணிக்கு மேல் திடீரெனப் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கனமழை காரணமாக, சென்னையில் தரையிறங்க வேண்டிய சுமார் 12 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி பறந்தன. கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி, மதுரை, விஜயவாடா, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த இந்த விமானங்கள், மழை சற்று குறைந்த பின்னர் வரிசையாகத் தரையிறங்கின.

அதேபோல், சென்னையிலிருந்து குவைத், துபாய், டெல்லி, கொச்சி, கோவா, மங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய 12 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால், மொத்தம் 24 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.