தமிழ்நாடு

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

By VASUKI
22 Sep 2025, 09:53 AM
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004-ஆம் ஆண்டு, ஒரு தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளைக் கடத்தி பாலியல் தொந்தரவு அளித்ததாக சதுர்வேதி சாமியார் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், சதுர்வேதி சாமியார் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.

இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதன் காரணமாக, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.