Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

By VASUKI
22 Sep 2025, 12:49 PM
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் தங்கி, அவரது மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு வெங்கடசரவணன என்ற S.A.R.பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமியார், உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2005 ஆம் ஆண்டு காவல் இறுதி அறிக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கானது மகளீர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ளது.

ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின் போது வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வெங்கடசரவணன் (எ) S.A.R பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி நீதிமன்ற விசாரணையின் போதும், சாட்சியங்கள் விசாரணையின் போதும் ஆஜராக வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்த போதிலும் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்தடித்தார்.

மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் அறிக்கையை ஆராய்ந்த மகிளா நீதிமன்றம் சதுர்வேதி சாமியாரை விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் அறிவித்த தேதியிலும் சதுர்வேதி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் விசாரணையில் இருந்து தப்பிக்க மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும், அதனால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக 3 மாதம் கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சென்னை காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்ட சதுர்வேதியை கண்டுபிடிக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை விரிவாக தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட சதுர்வேதி சாமியார் கடந்த மே 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் இல்லை எனில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் எனக் கூறி நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இதிலும் பல கால அவகாசம் கொடுத்தும் சாமியார் சதுர்வேதி ஆஜராகாததையடுத்து கடந்த ஜூலை மாதம் சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை மத்திய பெற்ற பிரிவு போலீசார் சதுர்வேதி சாமியார் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 ஆண்டு காலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சதுர்வேதி சாமியார் தலைமறைவாகி இருந்து வருவதால் அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் படுத்த சென்னை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.