Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Ameer: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு... ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் ஆஜராக உத்தரவு!

By Kalandhai
28 Oct 2024, 11:42 PM
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். போதைப் பொருட்கள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது. ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில், இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது, 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு கடந்த 18ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து, சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். எழில் வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர், இயக்குநர் அமீர் ஆஜராகினர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவமபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.   

ஜாபர் சாதிக் தயாரிப்பில் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வந்தார் அமீர். ஆனால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதால் இந்தப் படம் ட்ராப் ஆனது. இதனிடையே டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான இயக்குநர் அமீர், இந்த வழக்கி விசாரணையில் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.