Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு... நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

By VASUKI
15 May 2025, 04:14 PM
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தின் வாயிலாக சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டு, மே 20 தேதி முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாததால், திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மனதாரர் சொல்லித் தர வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.