தமிழ்நாடு

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

By VASUKI
30 Jun 2025, 10:43 PM
தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கோவை 100 அடி சாலையில் பகவதி செட்டிநாடு உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தின் உரிமையாளரின் இரு மகன்களான முத்துக்குமார் மற்றும் கணேசன் இருவருக்கும், அவரது தந்தை சொத்தை சரி பாதியாக பிரித்து தந்துள்ளார். அண்ணன் முறையிலான முத்துக்குமாருக்கு சிவானந்த காலனி பகுதியில் ஒரு உணவகமும், ஏற்கனவே இயங்கி வந்த உணவகத்தை இளைய மகன் கணேசனுக்கும் வழங்கி இருக்கின்றார்.

இந்த நிலையில், தனது தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவெடுத்த கணேசன், நிலத்தின் உரிமையாளரிடம் 10 வருடத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்துட்டு கட்டமைப் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

ஒப்பந்தத்திற்கு முன்பே நிலத்தின் உரிமையாளர் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இழப்பீட்டுத் தொகை மற்றும் முன்பணம் என மொத்தம் 50 லட்சம் ரூபாயை கணேசனுக்கு வழங்கி இருக்கின்றார்.

கணேசனுக்கு வழங்கப்பட்ட தொகையில் தனக்கு பங்கு வேண்டும் என, முத்துக்குமார் தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், முதலில் 6 லட்சம் பிறகு 3 லட்சம் என 9 லட்சம் ரூபாயை கணேசன் தரப்பில் இருந்து, முத்துக்குமாருக்கு ரொக்கம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், இந்த தொகை போதுமானதாக இல்லை என அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த முத்துக்குமார், கணேசனை கொல்ல திட்டமிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரவு 9.30 மணி அளவில் தனது வீட்டு அருகே, உணவு வாங்கிக் கொண்டு வந்த கணேசனை வழிமறித்த முத்துக்குமார், தன்னிடம் மறைத்து வைத்து இருந்த அறிவாள் எடுத்து சகோதரன் கணேசனை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தார்.

அப்பொழுது அதனை தடுக்க முற்பட்ட கணேசனின் கைவிரல்கள் வெட்டுப்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டது. ஒரு விரல் இரண்டாகத் துண்டானது. கணேசனின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது மனைவியும் மகனும் ஓடி வந்த பொழுது, கணேசனின் மகனையும் வெட்ட முத்துக்குமார் முற்பட்டான். இதனைத் தொடர்ந்து அப்பொழுது மக்கள் ஒன்று கூட ஆரம்பித்த பொழுது, கத்தியை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் முத்துக்குமார் தம்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கின் விசாரணை நடத்தி வந்தனர். கோவை மூன்றாவது சார்பு நீதிமன்ற நீதிபதி பிகே தமயந்தி முன்னிலையில் நடந்த விசாரணையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி மற்றும் ஆபாசமாக பேசுதல் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த இரண்டு குற்ற பிரிவுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முத்துக்குமாருக்கு, 7 ஆண்டு சிறை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.