சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து நடந்த சோதனையில், இது புரளி எனத் தெரியவந்துள்ளது.
யாருக்கெல்லாம் மிரட்டல்?
சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட பட்டியலில், முதல்வர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க. பிரமுகர் நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, கங்கை அமரன், லிவிங்ஸ்டன், எஸ்.பி.பி. சரண், திண்டுக்கல் ஐ. லியோனி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா, நடிகை குஷ்பு சுந்தர், ஜெயரஞ்சன், மற்றும் அமலாக்கத்துறையில் உள்ள சி.ஆர்.பி.எஃப். அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
சோதனை மற்றும் முடிவு
இந்தத் தகவலைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இருந்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
விசாரணை தீவிரம்
இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக, மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில் ஐடியைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.