Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

By Christon
22 Sep 2025, 12:35 PM
சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம் மற்றும் சுங்கத்துறை அலுவலகம் ஆகிய மூன்று அரசு அலுவலகங்களுக்கும் இன்று (செப்.22) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

அண்மைக் காலமாக நாடு முழுவதும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது. சென்னையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானவை எனத் தெரியவந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக சுங்கத்துறை அலுவலகத்துக்கும், புதிதாக ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மிரட்டலைத் தொடர்ந்து, மூன்று அலுவலகங்களில் இருந்த ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மிரட்டல்கள் குறித்துக் காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.