Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மாணவி சடலம்..போலீசார் விசாரணை!

By VASUKI
16 Apr 2025, 07:45 PM
சென்னை மெரினா கடற்கரையில், சரியாக தேர்வு எழுதாததால் வீட்டை விட்டு வெளியேறிய 12-ம் வகுப்பு மாணவி, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே இளம் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. தகவலின் பேரில் மெரினா போலீசார் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை பிணவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கரை ஒதுங்கிய இளம் பெண், ராயப்பேட்டை முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாணிக்க வாசகம் என்பவரது மகள் சௌமியா (17) என்பது தெரியவந்தது.

தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று நடந்த தேர்வை சரியாக எழுதாததால் வீட்டில் பிரச்சனை எழுந்ததும், அதன் காரணமாக இன்று காலை 11:30 மணியளவில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சைக்கிளில் கடற்கரை பரப்புக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.

மெரினா கடற்கரை பரப்புக்கு வந்த இவர், ஒளவையார் சிலையருகே சைக்கிளை நிறுத்தி விட்டு, மணற்பரப்பில் நடந்து சென்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சௌமியாவின் உடலை கைப்பற்றிய மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் சரியாக தேர்வு எழுதாததால் வீட்டை விட்டு வெளியேறிய 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

( தற்கொலை தீர்வல்ல: வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)