தமிழ்நாடு

பறவை காய்ச்சல் எதிரொலி: ஆஃபாயில் பிரியர்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங்!

By Christon
10 Feb 2026, 11:40 AM
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்தன. காகங்கள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் அறிவுறுத்தல்

பறவை காய்ச்சல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில்: “பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமாக குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.