Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு... மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து!

By nishika
21 Aug 2024, 01:20 AM
பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 

கடந்த ஒரு மாதமாக  மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில்  ஆங்காங்கே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதும், மரங்கள் வேரோடு சாய்வதுமாக இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக 6 நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு பின்பு, கடந்த 7ம் தேதியன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், தொடர் மழையால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் தற்போது மீண்டும் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இன்று (ஆகஸ்ட் 20) முதல் அடுத்த 3 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 25ம் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே  ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

ஊட்டி ரயில் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்: 

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊட்டி ரயில் இந்தியாவிலேயே மிக மெதுவான ரயில் ஆகும். இதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஓடும் ஒரு சில நீராவி என்ஜின் ரயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஊட்டி ரயிலில் பயணித்தால் நிறைய அற்புதமான விஷயங்களை பார்த்தபடி பயணிக்க முடியும். இந்த ரயில் செல்லும் பாதையில் 200க்கும் மேற்பட்ட பாலங்கள், 100க்கும் மேற்பட்ட வளைவுகள், குகைகள் என எல்லாவற்றையும் கடந்து போவதாக இருக்கும்.

மேலும் படிக்க: Apple Watch Series 10 : புதிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சுகளை களமிறக்குகிறக்குகிறது ஆப்பிள்!

மற்ற ரயில்கள் போல் இல்லாமல் ஊட்டி மலை ரயிலில் 3 தண்டவாளம் இருக்கும். அதாவது நடுவில் பல்லு சக்கரம் போன்ற அமைப்பு தண்டவாளம் முழுவதும் இருக்கும். ஏனெனில் ரயில் மேலே ஏறும் போது தவறிக்கூட கீழே வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த ரயிலின் முக்கிய சிறப்பம்சமாகும்.