Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர்

By Jayakumar
16 Jul 2025, 06:01 PM
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.
கோவை மாவட்டம், போத்தனூர் அருகே கருணாநிதி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது பயன்பாட்டு இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து சுதந்திர தினம், பொங்கல் விழா போன்ற விழா ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவது வழக்கம்.

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி

ரிசர்வ்சைட் என்பதால் மாநகராட்சி பெயர் பலகை பொருத்தப்பட்டு அங்கு சுற்றியும் கம்பி வேலி போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி இடம் என பெயர் பலகை உள்ள இடத்தில், காலை தி.மு.க வை சேர்ந்த தளபதி சுரேஷ் என்பவர் பொது பயன்பாட்டு இடத்தில் சுவர் கட்டுவதற்காக கட்டுமான பொருட்கள் மற்றும் பணியாட்களுடன் வந்து உள்ளார். அப்போது விவரம் அறிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து நீங்கள் யார் என அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த இடத்திற்கான பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனக்கு அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரையும் தெரியும் என மிரட்டல் தோணியில் பேசியதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓட்டம் பிடித்த திமுக நிர்வாகி

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஊழியர்களும் வந்து இது ரிசர்வ் சைட் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு இருந்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதனை கண்ட தி.மு.க வை சேர்ந்த தளபதி சுரேஷ் மற்றும் பணியாட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் அங்கு இருந்து வேகமாக ஓட்டம் பிடித்து உள்ளார். மாநகராட்சி தரப்பில் இருந்து இதற்கு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.