Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல்.. தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!

By VASUKI
26 Feb 2025, 02:52 PM
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குமுதம் நிறுவன ஒளிப்பதிவாளர் இளங்கோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் பவுன்சர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தாக்குதலுக்கு விஜய் முழுப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும். அது மட்டுமல்லாது காயமடைந்த திரு.இளங்கோ அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் இழப்பீடுகளும் கொடுக்க வேண்டும் 

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய், ஜனநாயகத்தின் நான்காம் தோழனாக விளங்கும் பத்திரிகையாளர்களை எப்படி அணுக வேண்டும்? என்பதையும் தன்னுடன் இருப்பவர்களுக்கு தெளிவுபடுத்தி சொல்ல வேண்டும். 

நீங்கள் அரசியலில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது. அதற்கான அடித்தளக் கட்டுமானத்தை மிகச் சரியாகக் கட்டமைத்தால் மட்டுமே, உங்களது பயணம் வெற்றிகரமாக அமையும். பயணத்தில் இது போன்ற சிறு சிறு இடர்களும் கூட தங்களுக்கு சங்கடங்களையே உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.  

எந்த சூழல் மற்றும் காரணங்களுக்காகவும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை, ஒரு காலமும் அனுமதிக்க முடியாது. இதற்கு முழு பொறுப்பேற்று திரு.விஜய் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.