செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள காரைத்திட்டு கிராமத்தில் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவி, தனது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (20) மற்றும் அவரது நண்பர் அஜய் (27) ஆகியோர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
கொடூரமான வன்கொடுமை
மகேஸ்வரனின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற இருவரும், அங்கு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கட்டையால் தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த மாணவியை, தேடி வந்த அவரது தந்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் அதிரடி நடவடிக்கை
இது குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.