Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

By Jayakumar
08 Apr 2025, 12:55 PM
வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

கருப்பு சட்டையில் அதிமுகவினர்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், அதிமுக கருப்பு சட்டையை அணிந்து வந்ததற்கு நான் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன்.அதிமுக காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்ததற்கு மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கபடாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களை பாதுகாக்க நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 12 - 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். எனவே வெப்பத்தில் இருந்து மக்கள், மாணவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், மழை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டது போல், தற்போது வெயில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.