தமிழ்நாடு

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

By VASUKI
18 Jul 2025, 08:38 PM
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் பலர், பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டாலும், அரசு பதிவு இன்றி திருமண உறவுகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையை சரிசெய்யும் வகையில், தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, திருமண பதிவு இன்றி இருக்கும் தம்பதிகளின் விவரங்களை திரட்டிய அரசு, தொடக்கமாக 98 தம்பதிகளின் திருமணங்களை அதிகாரபூர்வமாக பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வரும் ஜூலை 26ம் தேதி சனிக்கிழமை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices) சிறப்புமாக திறக்கப்படுகின்றன.

இந்நடவடிக்கையின் மூலம், திருமணங்கள் சட்டபூர்வமாக ஆவணம் செய்யப்படும் மற்றும், பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் உரிமைகள் பெறும் வசதி ஏற்படும் மற்றும், அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான தடைகள் நீங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம், மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நீண்ட நாள் பூர்வீக பிரச்சனையாக இருந்த திருமண பதிவு சிக்கலுக்கு தீர்வு அளிக்கிறது. இது, அவர்களது சமூக நலனும், சட்ட உரிமையும் உறுதி செய்யும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இது தவிர, இதுபோன்ற திருமணங்கள் தொடர்ச்சியாக பதிவுசெய்யும் வகையில் ஒரு நிரந்தர திட்டத்தையும் அரசு வகுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.