Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

By VASUKI
11 Dec 2024, 05:53 PM
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள்  எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. 

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக கூறினார். 

இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச்செயல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள்  ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை  ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து தள்ளிவைக்க வேண்டுமெனவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர்  கோரிக்கை வைத்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, அனைத்து மனுக்கள் மீதும்  பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.