Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்... மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்..!

By VASUKI
28 Jan 2025, 10:18 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் போலீசாரின் விசாரணைக்கு பின்ன்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை  வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சமீபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து போலீஸார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும்  எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அவரது வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வு குழுவினர் பதிவு செய்தனர். போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரன் வலிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

7 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து இன்று ஞானசேகரன் சைதாப்பேட்டை  9 வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ரிமாண்ட் செய்வதற்கான பிட்னஸ் சான்றிதழை பெறுவதற்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அழைத்து சென்றனர். 

பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஞானசேகரனை போலீசார் பாதுகாப்போடு புழல் சிறையில் அடைத்தனர்.