Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

By Jayakumar
28 Apr 2025, 09:03 AM
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு


அம்பேத்கர் படம் அழிப்பு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட முனியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு சுவற்றில் தலைவர்களின் படம் வரையப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைவர்களின் படங்களில், குறிப்பாக அம்பேத்கரின் படத்தை மட்டும் ஆயில் பெயிண்ட்டை ஊற்றி மர்ம நபர்கள் அழித்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் மற்ற தலைவர்களின் படங்களையும் பெயரளவுக்கு அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் வலங்கைமான் பகுதியில் தொடர்ந்து இது இரண்டாவது சம்பவமாக அம்பேத்கரை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதனால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறகூடாது என்றும் வலியுறுத்தினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அம்பேத்கர் படத்தை மட்டும் அழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.