Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

By Jayakumar
01 Jul 2025, 04:15 PM
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
திருப்புவனம் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் அஜித்குமார் 9 இடங்களில் தாக்கப்பட்டதும் குரல்வளையில் காயம் ஏற்பட்டது. உள் உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது.

இதைத்தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணமான ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு நேரில் ஆஜர் செய்தனர். ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறை

இந்த நிலையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா?


கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

சிறப்பு விசாரணைக் குழு

அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.