தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கில் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது; நீதிமன்ற காவல் மறுப்பு!

By VASUKI
16 Sep 2025, 03:04 PM
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை ராயப்பேட்டை போலீசார் இன்று கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனக் கூறி, அவரை நீதிமன்றக் காவலில் வைக்கச் சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை, ராயப்பேட்டை கௌடியா மடம் சாலையில் உள்ள ஒரு கடையை, புரட்சி தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்ய மறுப்பதாக சாரா வஹாப் என்பவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பரந்தாமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கட்சியின் மாநிலத் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, ராயப்பேட்டை போலீசார் இன்று அவரைக் கைது செய்தனர். ஏற்கனவே, விசிக-வினரை கத்தியால் தாக்கிய வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூர்த்தியை, போலீசார் சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கில் மூர்த்திக்குத் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க இயலாது என உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை மீண்டும் புழல் சிறையிலேயே அடைத்தனர்.