Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

By leninakathiya
12 Oct 2024, 08:05 PM
விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி பண்டிகையின் போது தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அன்றைய தினம் தங்கள் குழந்தை படிப்பை தொடங்கும் பட்சத்தில் கல்வியில் தங்கள் குழந்தை சிறந்து விளங்கும் என்று நம்புகின்றனர்.

இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் பலவும் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆயத்தம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முனைப்பில் இந்த ஆண்டு விஜயதசமி தினத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாணவர்களுக்கு பயன் அளிக்கவும், அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி அரசு பள்ளியில் வழங்கப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகமாகும் என்ற நம்பிக்கை இருப்பதாக தலைமையாசிரியர் ராமலட்சுமி தெரிவித்துள்ளார்.