Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கரூரில் வேகமாக வெளியேறிய நடிகர் விக்ரம்..காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

By Jayakumar
31 Mar 2025, 07:15 AM
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக திரையரங்கிற்குள் காத்திருந்த ரசிகர்கள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கரூரில் நடிகர் விக்ரம் நடித்த 'வீர தீர சூரன்' திரைப்படம் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில், கரூர் திண்ணப்பா திரையரங்கத்திற்கு நேற்று இரவு 7.30 மணிக்கு நடிகர் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களுடன் காண வந்தார். திரையரங்கிற்கு அருகே உள்ள கேட்டில் நுழைந்தபோது சிறிது நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். 

நடிகர் விக்ரம் வருகை

கூட்டத்தை கண்டு விக்ரம் வெளியே வராமல் இருந்ததால் வெளியே வாருங்கள் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து வெளியே வந்த விக்ரம் அருகில் உள்ள தங்கும் விடுதியின் கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏணி போட்டு ஏறி ரசிகர்களிடம் சாமி திரைப்படத்தில் வரும் ஆறுசாமி வசனத்தை பேசி உற்சாகப்படுத்தினார்.

Read more: ‘எம்புரான்’ பட சர்ச்சை–நடிகர் மோகன்லால் வருத்தம்

தொடர்ந்து ரசிகர் ஒருவரின் செல்போன் மூலம் செல்பி வீடியோ எடுத்துக் கொண்ட அவர், ஏணிப் படியில் கீழே இறங்கி திரையரங்கத்திற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டம் அதிகமானதால் போலீசார் வாகனத்தில் ஏறி அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக திரையரங்கிற்குள் காத்திருந்த ரசிகர்கள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தவறவிட்டதாக இளைஞர்கள் போலீசாரிடம் கூறினர். செல்போனை தொலைத்த அந்த ரசிகரை காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்குமாறு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் நடிகர் விக்ரமை பார்க்க ஆவலுடன் திரையரங்கில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Read more: தவெகவினருக்கு அனுமதி மறுப்பு – போலீசார் தடுத்ததால் பரபரப்பு