Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தெய்வசெயல் மீதான புகார்.. ஆளுநரை காண ராஜ்பவன் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

By MUTHUKRISHNAN
22 May 2025, 07:10 PM
திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு கிடைத்த சில நாட்களுக்குள், இளம்பெண் ஒருவர் அளித்த புகார் அரசியல் ரீதியாகவும் பேசுப்பொருளாகியுள்ளது. தெய்வசெயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொண்டு அரசியல் பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்தார் என இளம்பெண் குறிப்பிட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெய்வசெயல் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தவர்.

தெய்வசெயல் ஆளும் திமுக கட்சியை சேர்ந்த நபர் என்பதால், இளம்பெண் அளித்த புகார் அரசியல் வட்டாரத்திலும் முக்கிய பேச்சுப்பொருளாக மாறியது. தெய்வசெயல் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக்கோரி இளம்பெண் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் வருகை தந்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த இளம்பெண் கூறுகையில், “தமிழக காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனது வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டி தான் ஆளுநரிடம் முறையிட என்று வந்தேன். இந்த சம்பவம் குடும்ப பிரச்சனை இல்லை, இது வன்கொடுமை. FIR காப்பியை கூட நான் காவல்துறையிடம் வாங்கவில்லை. காவல்துறையினர் என்னை குற்றவாளி போல விசாரிக்கிறார்கள், தவறு செய்தவனை விசாரிக்கவே இல்லை. அதனால்தான் ஆளுநர் மாளிகைக்கு வந்தேன்.

நான் இன்று ஆளுநரிடம் கொடுக்க உள்ள புகார் எனது கைப்பட எழுதிய புகார். இது ஏமாற்றி செய்த திருமணம். இது குடும்ப விவகாரம் கிடையாது. திமுகவில் இருந்ததால் தான் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை. நான் என்ன செத்தா போகிவிட்டேன், உயிரோடு தானே இருக்கிறேன் என அவன் எண்ணுகிறான். இவனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.”

ஆதாரங்கள் கசிந்ததா?

”என்னுடைய வழக்கில் கொடுக்கும் தண்டனை தான் மற்ற பெண்கள் தைரியமாக வெளியில் வர உறுதியாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை என்னிடம் இல்லை. திமுக ஐடி விங்ஐ சேர்ந்த ராகுல் என்ற ஐடியில் இருந்து நான் காவல்துறையிடம் கொடுத்த ஆதாரங்களை எல்லாம் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.

தைரியமாக ஒரு பெண் வெளியில் வரவே கூடாது என திமுகவினர் எண்ணுகிறார்கள். என்னுடைய தன்னம்பிக்கையை நான் இழந்து விட்டேன், நான் அழவே மாட்டேன் இப்போது எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் எனது வழக்கை எடுக்க மாட்டேங்கிறார்கள் என்ற பல குழப்பங்கள் எனக்குள் இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பதில் எனக்கு சந்தோசம். இந்த வழக்கை உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்பதுதான் எனது இறுதிக்கட்ட கோரிக்கை” என இளம்பெண் குறிப்பிட்டார்.

புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரை புகாரோடு கிண்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு கிண்டி காவல் ஆய்வாளர் தேவேந்திரர் இரண்டு பெண் காவலர்களோடு ஆட்டோவில் அனுப்பி வைத்தார். கிண்டி ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து கிண்டியை நோக்கி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர் , இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தாயாரும் ஆட்டோவில் இருந்து குதிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் இருவரையும் பாதி வழியிலேயே இறக்கி விட்டு சென்று விட்டனர்.