Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்த மாணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்

By nagalekshmi
24 Feb 2025, 03:04 PM
கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த விவகாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவியை 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனியே அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி மாணவி 12-ஆம் வகுப்பு மாணவர் அழைத்த இடத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு அந்த மாணவருடன் நண்பர்கள் சிலரும் இருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் வெளியில் கேட்டால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் மாணவர்கள் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதன்பின்னர் அருகில் இருந்தவர்கள் சிலர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட மாணவிக்கு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அம்மாணவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து மாணவியின் தாயார் கூறுகையில், நேற்று இரவு 7.30 மணி அளவில் கழிவறை சென்று விட்டது வருவதாக கூறிய மகள் பத்து நிமிடம் கழித்தும் காணவில்லை. இதையடுத்து மகளை தேடிய போது அவள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஓடி வந்ததாக சிலர் தெரிவித்தனர். என் மகளுக்கு நடந்த கொடுமைக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என  கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தற்போது வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்றும்  நகைக்காக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு  கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தொலைக்காட்சியில் தவறான செய்தி வெளியாகுவதாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிக்கை வெளியான சில நிமிடத்திலேயே அவரது தாய், தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பேட்டியளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.