Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ரயிலில் நெல்லைக்கு 8 கிலோ கஞ்சா கடத்தல்.. போலீசார் விசாரணை..!

By VASUKI
16 Mar 2025, 12:44 PM
மதுரை ரயில் நிலையத்திற்குள் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு 8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வந்த சிறுவன் உள்பட மூவர் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ரயில் நிலையத்தில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரயில்வே மற்றும் இருப்புபாதை காவல்துறையினர் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர். 

ரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினரும் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்குவங்களம் புருளியா - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது அவர்களது உடமைகளை எடுத்துசென்ற கைப்பைகளில்  சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் ராஜா, அஜித்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் ஆகிய மூவரையும் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை இருப்புபாதை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்திவரப்பட்டு அவை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று இளைஞர்கள் மற்றும் மாணாக்கர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மூவரும் கஞ்சா பொட்டலங்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்த பிண்ணனி தொடர்பாக தொடர்விசாரணையையும் இருப்புபாதை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.  தென்மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனைக்காக கடத்திவரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் இருப்புப்பாதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்