Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோவையில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

By Christon
09 Aug 2025, 10:43 AM
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு பாலியல் தொல்லை

கோவை அருகே ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்றுவந்த அந்தச் சிறுவன், கடந்த சில நாட்களாக சோகமாகவும், அமைதியாகவும் இருந்துள்ளான். இந்த மாற்றத்தைக் கவனித்த அவனது பெற்றோர், என்ன நடந்தது என்று மெதுவாக விசாரித்தனர். அப்போது, அந்தச் சிறுவன் அளித்த பதில் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவனது பள்ளியில் உள்ள 36 வயதான ஆசிரியர் ஒருவர், கடந்த சில நாட்களாக அந்தச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

இந்தச் செய்தி கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இது குறித்துக் கேட்டனர். ஆனால், அவர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதையடுத்து, மனமுடைந்த பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த ஆசிரியரைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரே, மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .