Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம்.. வேறு நபருக்கு பட்டா!

By VASUKI
31 Mar 2025, 08:42 PM
திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தவறுதலாக வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலம்  கிராமத்தைச் சேர்ந்த சுப்பா நாயக்கர் என்பவர், தனக்கு சொந்தமான கிணற்றில் இருந்து ஊர் மக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் வகையில், தர்ம தண்ணீர் பந்தல் என்ற அறக்கட்டளையை துவங்கி, கிணறு இருந்த சுமார் 4 ஏக்கர் நிலத்தை, 1917-ம் ஆண்டு எழுதி வைத்தார். 

ஆனால், இந்த நிலத்தை வெங்கடசாமி என்பவருக்கு  பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி, சுப்பா நாயக்கரின் சட்டப்பூர்வ வாரிசுகளில் ஒருவரான கே.சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் திலகவதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பட்டா, நில அளவை புதுப்பிக்கும் போது, தவறுதலாக பட்டா பெயர் மாற்றப்பட்டு விட்டதாகவும், அதனை ரத்து செய்து, நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுதாரர், எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி, உண்மையான உரிமையாளர் பெயருக்கு பட்டா வழங்கும்படி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டது