Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

By Jayakumar
21 May 2025, 05:46 AM
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு கிரிவளை சூரங்குடியைச் சேர்ந்த பாலபிரபு(28), பாலபிரபுவின் 2 1/2 வயது பெண் குழந்தை கவிகா, பாலபிரபு மனைவி கௌரி (27), கௌரியின் தந்தை கந்தசாமி (50) உட்பட 4 பேர் கன்னியாகுமரியிலிரருந்து தங்களது காரில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

அப்போது இன்று காலை சுமார் 8 மணியளவில் பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை-பெருமாள்பாளையம் அருகில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் எதிர்ப்புறம் வந்தபோது கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாலபிரபு, கந்தசாமி, குழந்தை கவிகா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் படுகாயமடைந்த கௌரியை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலபிரபு காரை ஓட்டி வந்தபோது தூக்க கலக்கத்தில் இருந்தவாறு இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21/2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.