Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

POCSO வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By VASUKI
15 Jul 2025, 08:46 PM
POCSO வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் சோலைமுருகன் (23) என்பவர் ஒரு சிறுமியை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் தன்மைபடி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் குழந்தை காணவில்லை (Girl Missing) என வழக்குப் பதிவு செய்யப்பட்டு துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டு உரிய சட்டப் பிரிவில் மாறுதல் செய்து, எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி முறையாகப் புலன் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் எதிரியின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரணை செய்த திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. சுதாகர் அவர்கள் இன்று (15.07.2025) மேற்படி எதிரியைக் குற்றவாளியென அறிவித்து, எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.