Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. இளைஞரை துடிக்க துடிக்க வெட்டிய கும்பல்

By nagalekshmi
10 Apr 2025, 07:22 PM
கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் பெரியசாமி வீதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (28). இவர் சாய்பாபா காலனியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குனியமுத்தூர் மகாராஜா காலனியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அவரது தந்தை சிராஜ் ஆகியோர் கடந்த 5-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, குனியமுத்தூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரே வந்த நாசர் என்பவர் ஹரிஷ் மற்றும் அவரது தந்தை சிராஜ் வந்த பைக் மீது மோதினார்.

அதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாசர் தனது அண்ணன் சதாம் என்பவரை அங்கு வரவழைத்து ஹரிஷ் மற்றும் சிராஜ் மீது குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். சிராஜ் தனது நண்பர் தவுபீக் என்பவரை அழைத்து சதாமிடம் சமாதானம் பேசும்படி கூறினார். இதையடுத்து தவுபீக், அசாருதீனை அழைத்து புகார் அளித்த சதாமிடம் சமாதானம் பேச தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 6-ம் தேதி சமாதானம் பேச அசாருதீன், தவுபீக் மற்றும் அவரது நண்பர் ஆசிக் ஆகியோர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு சென்றனர். சதாம் தரப்பில் இருந்து முகமது ரபீக், அபாஸ், சம்சூதின், மன்சூர், சர்பூதின், ஆகியோரும் வந்தனர். அங்கு இரு தரப்பினரும் பேசி கொண்டு இருந்த போது திடீரென அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதாம் தரப்பினர் அசாருதீனை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.

பின்னர், முகமது ரபீக் மற்றும் மன்சூர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசாருதீனை குத்தினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அசாருதீனுடன் வந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்
முகமது ரபீக் , சதாம் , அபாஸ், சிறுவாணி டேங் பகுதியைச் சேர்ந்த சம்சூதின், மன்சூர் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய சர்பூதினை போலீசார் தேடி வருகின்றனர்