விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

By Christon
25 Oct 2025, 05:01 PM
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்தது எப்படி?

கடந்த வியாழக்கிழமை 23 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர், தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருந்து அருகிலுள்ள காஃபி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், வீராங்கனைகளைத் தகாத முறையில் தொந்தரவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரியின் புகார் மற்றும் நடவடிக்கை

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வீராங்கனைகள், உடனடியாகத் தங்கள் அணியின் பாதுகாப்பு மேலாளரான டேனி சிம்மன்ஸுக்கு அவசர தகவல் (SOS) அனுப்பியுள்ளனர். தகவலின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து, டேனி சிம்மன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் ஹிமானி மிஸ்ரா, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளி கைது

சம்பவம் நடந்தபோது அங்கிருந்த நபர் ஒருவர், குற்றவாளியின் மோட்டார் சைக்கிள் எண்ணைக் குறித்து வைத்துள்ளார். அந்த எண்ணின் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக, அகீல் கான் என்பவரை போலீசார் நேற்று (அக்.24) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அகீல் கான் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.