அரசியல்

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

By Christon
08 Jul 2025, 07:54 PM
“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக-வின் செயல்வீரர்கள் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியார்களை சந்தித்து வைகோ கூறியதாவது, “எங்கள் இயக்கம் தொடங்கி 31 வருடங்களாகிவிட்டது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். திமுகவுக்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக மதிமுக உடன் இருக்கும். 2026 தேர்தலில் திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் உடன்பாடு கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக எத்தனை தொகுதிகள் கோரும் என்ற கேள்விக்கு, “எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் தான், அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதலான தொகுதிகளை தான் கேட்போம்” எனக் கூறினார்.

மதுரை நகராட்சி ஊழல் தொடர்பாக முதலமைச்சரின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர் ஸ்டாலின் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார்” என்றார்.

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்த கேள்விக்கு, “மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு மின்மயமாக்கப்பட்ட கேட்டுகளாக மாற்றி விபத்துக்கள் ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கும் ரயில்வே அமைச்சரத்திற்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது.
.
இரண்டு பச்சிளம் உயிர்கள் பறிபோனது வேதனையாக உள்ளது. கடலூர் ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.