அரசியல்

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

By Christon
09 Jul 2025, 08:58 PM
கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும், அவர் ரோப் கார் மூலம் மலைக்குச் சென்று அங்கு அமிர்தவல்லி தாயார் மற்றும் நரசிம்ம ஸ்வாமி ஆகியோரை வழிபாடு செய்தார். அங்கு தமிழிசை சௌந்தரராஜனுக்கு சிறப்பு வரவேற்பு மற்றும் மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழக அரசால் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுவது வரவேற்பு தக்க விஷயம். பூர்வ காலத்தில் மன்னர்கள் கும்பாபிஷேகங்களில் பங்கேற்று உள்ளனர்.

ஆனால் தற்போது நடைபெறும் கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார்? என்று தெரியவில்லை.
மேலும், திமுக தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால், தமிழக முதலமைச்சராக ஏன் அவர் கலந்து கொள்ளவில்லை ?

கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், கும்பாபிஷேகங்களில் கலந்துகொள்வதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சோளிங்கர் பகுதியில் கனிம வளங்கள் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், எதிர்கால சந்ததிக்கு நல்ல இயற்கையான சூழல் ஏற்படுத்தி தரும் வகையில் இந்த கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.