Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

ஓபிஎஸ் பேச நாங்கள் வாய்ப்பு வழங்க முடியாது-சபாநாயகரிடம் வேலுமணி திட்டவட்டம்

By Jayakumar
19 Mar 2025, 02:36 PM
ஓபிஎஸ்-ஐ  காண்பித்து அவர் பேச வாய்ப்பு கேட்கிறார் என்பது போல கேட்க, அதற்கெல்லாம் நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். என்னை இதில் கோர்த்து விட வேண்டாம் என்பது போல சபாநாயகரை சைகை காண்பித்து விட்டு வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார் எஸ்.பி. வேலுமணி. 

ஓபிஎஸ் பேச நாங்கள் வாய்ப்பு வழங்க முடியாது என சபாநாயகரிடம் வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவையில் இன்று வினாக்கள், விடைகள் நேரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகர் அப்பாவுவிடம் வந்து  தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதற்கு உங்கள் கொரடாவின் ஒப்புதல் வேண்டும் என சபாநாயகர் கூறி, எஸ்.பி. வேலுமணியை சைகை காட்டி அருகில் அழைத்தார்.

எஸ்.பி வேலுமணியை அழைத்த சபாநாயகர்

சபாநாயகரின் அழைப்பை ஏற்று எழுந்து நின்ற  வேலுமணி, சபாநாயகர் அருகில் ஓபிஎஸ் நிற்பதை பார்த்து அவர் சென்ற பிறகு நான் வருகிறேன் என தன் இருக்கையின் அருகிலேயே நின்று கொண்டார்.பிறகு ஓபிஎஸ் சபாநாயகர் காதில் ஏதோ சொல்லிவிட்டு தன் இருக்கையை நோக்கி சென்றுவிட அதன் பிறகு  வேலுமணி சபாநாயகர் அருகில் வந்தார்.

 ஓபிஎஸ்ஐ  காண்பித்து அவர் பேச வாய்ப்பு கேட்கிறார் என்பது போல கேட்க, அதற்கெல்லாம் நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். என்னை இதில் கோர்த்து விட வேண்டாம் என்பது போல சைகை காண்பித்து விட்டு வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார். 

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் மறைமுகமாக ஓபிஎஸ் இடமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இடமும் சட்டப்பேரவை வளாகத்தில் பேசுவதை பார்க்க முடிந்தாலும், நேரடியாக ஓபிஎஸ்யும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களையும் அங்கீகரிக்கவோ, கட்சியில் சேர்த்துக் கொள்ளவோ தயாராக இல்லை என்பதை தன் எஸ்.பி.வேலுமணியின் நடவடிக்கை காட்டுவதாக அமைந்துள்ளது.