Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

டிடிவி தினகரனின் முடிவுக்குக் காத்திருக்கிறோம்.. அண்ணாமலை பேட்டி!

By Christon
23 Sep 2025, 11:42 AM
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு நேற்று (செப்.22) மாலை நேரில் சென்று அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அண்ணாமலை விளக்கம்

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கடந்த ஒரு மாதமாகச் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், சென்னை வந்தவுடன் அவரைச் சந்தித்தேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தோம். டிடிவி தினகரன் 2024 முதல் எங்களுடன் பயணித்து வருகிறார். அவருடன் எனக்கும், பாஜகவுக்கும் நட்புறவு தொடர்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரது முடிவுக்குக் காத்திருக்கிறோம். அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சில மனஸ்தாபங்கள் மாறும் என நினைக்கிறேன். அரசியலில் நிரந்தர எதிரிகளும், நண்பர்களும் கிடையாது, கூட்டணிகள் மாறும்” எனவும் அண்ணாமலை கூறினார்.

ஓ.பி.எஸ்., விஜய் குறித்து அண்ணாமலை கருத்து

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்திக்க வேண்டும் என்றும், சுற்றுப்பயணம் முடிந்து வந்ததும் அவரைச் சந்திப்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்த நடிகர் விஜயின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார். “யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களை ‘பாஜகவின் பி-டீம்’ என்கிறார்கள். விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.