Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

புதுச்சேரியில் விஜய் சுற்றுப்பயணம்; 'ரோடு ஷோ' நடத்த அனுமதி கோரி கடிதம்!

By Christon
26 Nov 2025, 10:43 AM
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ரோடு ஷோ நடத்துவதற்காக அம்மாநில நிர்வாகிகள் அனுமதி கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது ரோடு ஷோ (Road Show) நடத்த அனுமதி வழங்கக் கோரி, அம்மாநில நிர்வாகிகள் புதுச்சேரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளனர்.

மக்கள் சந்திப்புப் பயணம் மீண்டும் தொடக்கம்

த.வெ.க. தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், கரூர் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் காரணமாக, தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அவர் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருந்தார். கரூர் சம்பவத்துக்கு முன்னர் த.வெ.க.வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் மதுரையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகியும் மக்களைச் சந்திக்கத் தயங்குவது ஏன் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரிக்கை

தள்ளிவைக்கப்பட்டிருந்த பயணத்தை மீண்டும் தொடங்கும் விதமாக, சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி, அம்மாவட்ட காவல்துறையிடம் த.வெ.க. நிர்வாகிகள் அனுமதி கடிதம் அளித்திருந்தனர். ஆனால், காவல்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக் கோரி, த.வெ.க. புதுச்சேரி மாநில நிர்வாகிகள், புதுச்சேரி காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கடிதம் அளித்துள்ளனர்.