அரசியல்

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

By Christon
02 Jan 2026, 01:09 PM
திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 'சமத்துவ நடைப்பயணத்தை' தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார். திமுக கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸின் புறக்கணிப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் பாராட்டுரை

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை திடலில் நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். "வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைப்பயணம்தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி. மக்கள் பிரச்சினைகளுக்காக அண்ணன் வைகோ இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்," என்று அவர் பேசினார். மேலும், 83 வயதிலும் நடைப்பயணம் மேற்கொள்ளும் வைகோவின் நெஞ்சுரத்தை வியந்த முதல்வர், வைகோவுக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுவதாகவும், அவரது நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்றும் வாழ்த்து தெரிவித்தார். பெரியார், கலைஞர் ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்தவர்தான் வைகோ என்று பெருமிதம் கொண்டார்.

காங்கிரஸ் புறக்கணிப்புக்கான காரணம்

வைகோவின் நடைப்பயணத் தொடக்க விழாவில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. ஆனால், தமிழக காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த விழா அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றிருந்ததால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செல்லவில்லை என்று சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரபாகரன் படம் இடம் பெற்றதன் காரணமாகவே காங்கிரஸ் இந்த நிகழ்வைப் புறக்கணித்தது திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.