அரசியல்

"விசிலுக்குப் பதில் இரட்டை இலை".. பிரசாரத்தில் செங்கோட்டையன் உளறல்!

By Christon
11 Apr 2026, 04:44 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் வாக்குச் சேகரிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய நான்கு முனைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாநிலம் முழுவதும் தீவிரமாகச் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சத்தியமங்கலத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று வாக்குச் சேகரித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த அவர், தவெக-வின் 'விசில்' சின்னத்திற்குப் பதில், "இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்று கூறிவிட்டார். நீண்ட காலம் அதிமுக-வில் இருந்தவர் என்பதால், மேடையில் அவர் அறியாமல் செய்த இந்தச் செயல் அங்கிருந்த தொண்டர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது.

தவறைச் சுதாரித்த செங்கோட்டையன்

தான் தவறாகக் கூறிவிட்டதை உடனடியாக உணர்ந்த செங்கோட்டையன், சட்டெனச் சுதாரித்துக் கொண்டு, "இரட்டை இலை என்று கேட்டு கேட்டுப் பழகிவிட்டது; மன்னித்துவிடுங்கள், நமது சின்னம் விசில்" என்று கூறி சமாளித்தார். பல வருடங்களாக ஒரே கட்சியில் இருந்துவிட்டு தற்போது புதிய கட்சியில் இணைந்திருப்பதால் ஏற்பட்ட இந்தத் தடுமாற்றம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.