Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. பொன்முடி-செந்தில் பாலாஜி விடுவிப்பு

By nagalekshmi
27 Apr 2025, 08:35 PM
தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், அமைச்சர் பதவியா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நீதிமன்றம் வைத்த கெடுவால் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவுள்ளார் என கூறப்பட்டது.

அதேபோல் சென்னை உயர்நீதின்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததும், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த பொன்முடி மீதான வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டதும் தி.மு.க தரப்புக்கு பின்னடைவாக உள்ளது. இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றம்

இந்நிலையில், தற்போது, தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறையும் காதி துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.