Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

By VASUKI
06 Mar 2025, 04:21 PM
முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் போராட்டம் நடத்தி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக "சம கல்வி, சம மக்கள் உரிமை" என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தனர். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றது. அதனை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பொதுமக்களிடம் கையெழுத்து பெற திட்டமிட்டு இருந்தார்.

ஆனால்,  காவல்துறை அவர் பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற அனுமதி அளிக்கவில்லை எதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தொடர்ந்து காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதிக்காததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் நிற்க வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இறுதியாக காவல்துறையினர் பொதுமக்கள் சிலரிடம் கையெழுத்து பெற அனுமதி அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பாமர மக்களுக்கும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்கிற தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

அனைவருக்குமான வாய்ப்பை மறுக்கும் முதலமைச்சர் அப்டேட் ஆக இல்லாமல், அவுட்டேட்டாக இருப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்தை முன் வைத்தார்.  சமஸ்கிருதத்தை திணிக்கவே ஹிந்தியை கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அது போன்று இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்ட நிலையிலும் அதனையே திமுக தொடர்ந்து கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.