Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அமித்ஷா தலைமையில் டெல்லியில் பாஜக கூட்டம்: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை!

By VASUKI
03 Sep 2025, 03:59 PM
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரங்கள், மற்றும் கள நிலவரம்குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம்

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பாஜக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. அப்போது எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமித்ஷா தமிழகம் வந்தபோது, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அமைந்தது.

அ.தி.மு.க. தரப்பில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், அமித்ஷா தரப்பில் கூட்டணி ஆட்சி அமையும் என மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இது போன்ற சூழலில், கூட்டணி விவகாரங்கள்குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனை மற்றும் முக்கிய நபர்கள்

டெல்லியில் உள்ள கிருஷ்ணா மேனன் சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், மற்றும் கள நிலவரம் போன்ற விஷயங்கள்குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.